தஞ்சாவூர், பிப்.17- சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை நீடிக்கிறது. வகுப்பறை கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை சுமார் 400 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு 12 வகுப்பறைகள் தேவை என்ற நிலையில் தற்போது 6 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதிலும் இரண்டு வகுப்பறைகள் மழை பெய்யும் நேரங்களில் ஒழுகும் நிலையில் உள்ளது. இதனால் கடந்த பல வருடங்களாக 6,7,8,வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் தான் அமர்ந்து படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு மழை பெய்தால் விடுமுறை, ஆனால், அடிக்கிற வெயிலை தாங்கிக்கொண்டு அமர்ந்து தான் படிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மேலும், 11,12 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் ஆய்வகம் கிடையாது. ஆங்கில பாடத்திற்கு ஆசிரியரும் இல்லாத நிலையும் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் இப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.