கரூர், பிப்.14- சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டம்- 2014 குறித்து அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு முறையான பயிற்சி அளித்திட வேண்டும். சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்கிட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் இலவச தள்ளு வண்டிகளை வெண்டிங் கமிட்டி தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து முறைகேடு இல்லாமல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், சாலை வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் எ.பிச்சைமுத்து, சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.