districts

திருப்பனந்தாள் வட்டாரத்தில் 5230 ஏக்கருக்கு மானிய விலையில் ரசாயன உரங்கள் வழங்க இலக்கு

கும்பகோணம்,  ஜூலை 19 - திருப்பனந்தாள் வட்டாரத்தில் 5,230 ஏக்கருக்கு வேளாண்மைத் துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வட்டாரத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் 16,500 ஏக்கரில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஆடுதுறை-43, 45, கோ-51 போன்ற சன்னரகங்களும், திருப்பதி-5, அம்பாசமுத்திரம் 16 என்ற 2 மோட்டா ரக நெல் வகைகளும் சாகுபடி செய்யப்படுகிறது. திருப்பனந்தாள் வட்டாரத்தில் உள்ள 13 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 45 கிலோ கொண்ட 1 மூட்டை யூரியா, 50 கிலோ கொண்ட 1 மூட்டை டிஏபி, 25 கிலோ கொண்ட அரை மூட்டை பொட்டாஷ் ஆகியவை 100 சதவீத மானிய விலையில் குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வேளாண் அலுவலர் கார்த்திக் கூறுகையில், குறுவை சாகுபடி திட்டத்தில் ரசாயன உரங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளின் செல்பேசிக்கு 4 இலக்கு ஓடிபி எண் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் உரங்கள் வழங்கப்படுகிறது. ஓடிபி எண்ணை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தெரிவித்து, ஆதார் நகலை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றார்.