districts

செம்பனார்கோயில் அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்துக! ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஜூலை 3 - செம்பனார்கோயில் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பிட வசதியை மேம்படுத்த வேண்டும் என ஒன்றியக் குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செம்பனார்கோயில் ஒன்றிய கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை‌ நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதில் தேவிகா பேசுகையில், சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் மற்றும் இறைச்சி கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் கழிவறை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், மாணவர்களுக்கு நோய் பரவும் அபாய நிலை நிலவுகிறது. எனவே கழிவறையை விரைந்து சீரமைக்க வேண்டும். அப்பள்ளியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும். பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சாந்தி கூறுகையில், ஆக்கூர் முக்கூட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்து அன்னப்பன்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்குரிய நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. அடிமனை தருமபுர ஆதீனம் திருக்கடையூர் கோயிலுக்கு சொந்தமானதாகும். அதற்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டிடங்கள், வீடு, ஆகியவற்றிற்கு இழப்பீட்டுத் தொகையை கடந்த இரண்டு வருடங்களாக தர மறுக்கின்றனர். எனவே இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றார். ரஜினி கூறுகையில், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிவறை மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான அங்கன்வாடி மையத்தில் 1,2 குழந்தைகள் மட்டுமே உள்ளனர். இதன் மூலம் அங்கன்வாடிக்கு செலவு செய்யும் அரசின் நிதி வீணாகிறது. எனவே ஆசிரியர்கள் அந்த பகுதியில் உள்ள குழந்தைகளை அதிகளவில் அழைத்து அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும். கொண்டத்தூர் பகுதியில் சுடுகாட்டிற்கு செல்ல சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  செம்பனார்கோயில் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர்.