districts

img

பட்டுக்கோட்டை, திருவோணம் கல்வி அலுவலர்களைக் கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன்.8 -  பட்டுக்கோட்டை தொடக்கக் கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச் செல்வம்,  திருவோணம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலர் மான்விழி ஆகியோரின் ஆசிரியர்கள் மீதான விரோதப்போக்கு, பாலியல் ரீதியான அச்சுறுத்தல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அலுவலக முறைகேடுகளைக் கண்டித்தும் இவர்கள் மீது  பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தஞ்சாவூர் மாவட்டக் கிளையின் சார்பில்  தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மணிமேகலை கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் க.மதியழகன்,மாநிலச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், ஸ்ரீதர், மார்கோனி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர்.  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் முழுவதிலிருந்தும் பெருந்திரளான ஆசிரிய, ஆசிரியைகளும், மாவட்ட மற்றும் வட்டார பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.