மயிலாடுதுறை, மார்ச் 1- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பகுதிகளில், வியாழனன்று இரவு முதல் பரவலாக மழை பெய்ததால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தரங்கம்பாடி வட்டத்தில் விவசாயிகள் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம், சம்பா சாகுபடி பணிகள் மேற்கொண்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தரங்கம்பாடி பகுதியில் உள்ள 47 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொண்டு வந்து, அடுக்கி வைத்து பல நாட்களாக விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் திருக்களாச்சேரியில், அமைந்துள்ள திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் தேங்கி நிற்கும் மழைநீர் வடிய வழியில்லாததால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி விடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தண்ணீரை வடிய வைக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, அரசு போதிய அளவில் தார் பாய்கள் வழங்கவில்லை எனவும், நெல் கொள்முதலின்போது, ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என்றும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.