திருச்சிராப்பள்ளி, பிப்.24- திருச்சி ரயில்வே குட்செட்டில் வெள்ளிக்கிழமை அன்று பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை அப்புறப்படுத்தக்கூறி சுமைப் பணி தொழிலாளர்களையும், லாரி ஓட்டு நர்களையும் தரக்குறைவாக பேசி, தாக்க முற்பட்டதை கண்டித்து சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் சுமைப் பணி தொழிலாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் 150-க்கும் மேற்பட்டோர் குட்செட் சாலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக ஆர்பிஎப் அதிகாரிகள் மிரட்டியதால் ஆர்பிஎப் அதிகாரிகளை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், 89 வேகன்களில் நாகையிலிருந்து வந்திருந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நெல் மூட்டைகள் அனைத்தும் தேக்கமடைந்தன. மேலும் லாரிகள் அனைத்தும் நெல் மூட்டைகளுடன் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து ரயில்வே கமர்சியல் மேலாளர் மோகனபிரியா போராட்டத்தில் ஈடுபட்ட சுமைப் பணி தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிரச்சனையை எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால், சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதி யளித்தார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.