திருவாரூர், ஏப்.29-
திருவாரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவால், 2023ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாண வர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு திருவாரூர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கில் மே1 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.
முகாமில் தடகளம், கால்பந்து. கூடைப்பந்து, ஹாக்கி மற்றும் கையுந்துபந்து, உள்ளிட்ட விளையாட்டுக் களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் முகாமில் கலந்து கொள்ளும் 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மாணவரல்லாதோர்களுக்கு காலை மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும்.
பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களில் திறமையான வர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவார்கள்.
பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.