பெரம்பலூர், பிப்.5- தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மனு அளிக்க இருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே மனு அளிப்பதற்கு ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு என காவல்துறையினர் தெரிவித்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை பார்த்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு காவல்துறையினர் சம்மதம் தெரிவிக்காததால், விவசாயிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் உள்ளே நுழையாத வண்ணம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற்கதவை காவல்துறையினர் மூடினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் 250க்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்ட பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் ஹெக்டேர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, 61,000 ஹெக்டேர் மக்காச்சோளம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்காசோளம், சின்ன வெங்காயம், மரவள்ளி, நெல் ஆகியன சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரண தொகையையும், பயிர் காப்பீட்டுத் தொகையையும் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.