கும்பகோணம், ஜூன் 8- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழவாற்றில் ஆகாயத்தாமரைச் செடிகளும் குப்பைகளுடம் மண்டிக்கிட க்கின்றன. இதனால் கடை மடைக்கு தண்ணீர் போகாத நிலை உள்ளது.செடிகள்,குப்பைகளை அகற்றி, தூர்வார வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கணேசன் கூறுகையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை அருகே காவேரி ஆற்றின் துணை ஆறாக உள்ள பழவாறு வாய்க்கால் பல்வேறு கிராமங்களின் விவசாய பணிகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அதன் மூலம் கல்லணையிலிருந்து விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் திறக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாய பணிகளை விரைவில் துவங்குவதற்காக விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் சுவாமிமலை பகுதியில் உள்ள பழவாற்றில் ஆகாய தாமரைகள் மற்றும் குப்பைகள் கொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது தண்ணீர் திறந்து விட்டால் ஆற்றின் கடைமடை பகுதிக்குச் செல்ல தண்ணீர் செல்வது மிகவும் கடினம். மேலும் நாகக்குடி, சுவாமிமலை, ஆதனூர், இன்னம்பூர், ஏராகரம், உத்திரை, கோவிலாசேரி, அணைக்குடி, திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் விவசாய பணிகளை செய்வதற்கு பழவாற்றின் தண்ணீரை நம்பியே விவசாயிகள் உள்ளனர். ஆகவே பொதுப்பணித்துறையினர் ஆற்றினை தூர் வாரும் பணியினை உடனே துவக்கி விவசாயம் செழிப்பாக நடைபெறுவதற்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் பழவாற்றி னை தூர்வாரும் பணியை உடனே செய்ய வேண்டும் என்று விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.