மெலட்டூர், நவ.12 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சியைச் சேர்ந்த கொத்தங்குடி, எடக்குடி, உதாரமங்கலம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டிடம் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளன. இதனால் சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். இதற்காக எடக்குடி மக்கள் மெலட்டூருக்கு செல்கின்றனர். உதாரமங்கலம் விஏஓ அலுவலகம் நூலக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. நூலக கட்டிடமும் பழுதடைந்துள்ளதால் கிராம மக்கள் பயத்துடனே சென்று வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் பழனி கூறுகையில், கொத்தங்குடி, எடக்குடி, உதாரமங்கலம் கிராம மக்களின் நலன் கருதி பழுதடைந்த கட்டிடங்களை இடித்து விட்டு, புதிதாக விஏஓ அலுவலகத்திற்கு கட்டடம் கட்டித் தர வேண்டும். கொத்தங்குடி, வெண்ணுக்குடியில் ரேசன் கடைக்கென கட்டிடம் இல்லாததால், அங்கும் புதிதாக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்றார்.