districts

கிளை அலுவலகத்தை நிரந்தரமாக மூட முடிவு பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப்.8 -  மயிலாடுதுறையில் உள்ள அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை நிரந்தரமாக மூடும் முடிவை கைவிட வலியுறுத்தியும், நிறுவனத்தின் முடிவை கண்டித்தும் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேஷனல் நிறுவனத்தின் இந்த முடிவை கண்டித்தும், முடிவை கைவிடக் கோரியும் செவ்வாயன்று மதியம் மயிலாடுதுறை நேஷனல் அலுவலகம் முன்பு யுனைடெட் இந்தியா, ஓரியண்டல் மற்றும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள், ஊழியர், முகவர்கள் மற்றும் எல்ஐசி நிறுவன ஊழியர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் ஜவஹர்லால் தலைமை வகித்தார்.  மயிலாடுதுறை ஓரியண்டல் நிறுவன கிளை மேலாளர் ஜெய்சங்கர், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர் பி.சத்தியநாதன், மயிலாடுதுறை ஐசிஇயூ பொறுப்பாளர் தர்மலிங்கம், மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் த.பிரபு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.