திருச்சிராப்பள்ளி, ஜன.1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட 23 ஆவது மாநாடு சனிக்கிழமை (ஜன.1) அன்று எடமலைப்பட்டிபுதூர் ஏ.கே.தம்பியப்பா திருமண மஹாலில் தோழர் கே.வரதராஜன் நினைவரங்கத்தில் தொடங்கியது. பொன்மலை சங்கத்திடலில் மாவட்டக்குழு உறுப்பினர் வின்சென்ட் எடுத்து கொடுத்த பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமையில் மாநாட்டை வந்தடைந்தது. பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். ஸ்ரீரங்கத்தில் மூத்த தோழர் இலக்குவன் எடுத்து கொடுத்த தோழர் கே.வரதராஜன் நினைவு கொடி, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் மாநாட்டை வந்தடைந்தது. தோழர் கே.வரதராஜன் நினைவு கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வெற்றிச்செல்வன் பெற்றுக் கொண்டார். மாநாட்டு கொடியை மூத்த தோழர் செபாஸ்டியன் டெக்ரூஸ் ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு சுரேஷ், ரேணுகா, ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சி.பாண்டியன் வாசித்தார்.
வரவேற்புக்குழு தலைவர் ஜூலியன் வரவேற்றார். மாநாட்டை மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்கராஜன் சமர்ப்பித்தார். மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, 80 வயதிலும் இடையறாத எழுத்துப்பணியில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் தோழர் இலக்குவனுக்கு பாராட்டு நிகழ்ச்சி, பிரதிநிதிகள் விவாதம், தீர்மானங்கள், புதிய மாவட்டக்குழு தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு நடைபெறுகிறது. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங் நிறைவுரையாற்றுகிறார். முடிவில் வரவேற்புக்குழு செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறுகிறார்.