கும்பகோணம், பிப்.15- பெரப்படி ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை பிப்.21 அன்று திறக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றியக் குழு அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் பெரப்படி ஊராட்சியில் தெற்கு தெருவில் பொதுமக்களுக்கு போதுமான பொது கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து, போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக, அப்பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில் சமுதாய சுகாதார வளாகம் 2020-21 நிதியாண்டில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய சுகாதார கட்டிட பணிகள் முடிந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பொதுக் கழிப்பறை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை உடனே திறக்க வேண்டும் என, கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய குழு மற்றும் பெரப்படி கிளை சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், பெரப்படி ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டங்களிலும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் இரண்டு ஆண்டுகளாக கழிவறை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றியக் குழு சார்பில் பிப்ரவரி 21 அன்று, கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிவறை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.