அரியலூர், ஜூலை 24 - பொதுப் பாதையை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை கண்டித்தும், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றாவது வார்டில், அரசுப் பேருந்து பணிமனை எதிரில் தீரன்நகர் அமைந்துள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மழை காலங்களில் மழைநீர் தேங்கி சாலையில் செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கழிவுநீர் பல்வேறு இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் குழாய் கேட்டு பலமுறை மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. இதுகுறித்து பகுதி மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலரும், முன்னாள் ராணுவ வீரருமான ஜி.ராமநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல் எம்.வெங்கடாசலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டி.தியாகராஜன், ஒன்றியத் தலைவர் எம்.மகேந்திரன், ஒன்றியப் பொருளாளர் ஆர்.தனவேல், வாலிபர் சங்கம் மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கோவிந்தராஜ் ஆகியோர் பேசினர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், “பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தர வேண்டும். பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அகற்றவில்லை எனில், நகராட்சி அலுவலகத்தில் பூட்டும் போடும் போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.