திருச்சிராப்பள்ளி, மே 16-
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ள சாராயம் குடித்து பலியானவர் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தொடர்பாக 200-க்கும் அதிகமானோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சிறப்புக் குழுக்கள் மத்திய மண்டலம் முழுவதும் சோதனைகள் மற்றும் வாகனத் தணிக்கை நடத்தி வருகின்றனர். மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் ஜி.கார்த்திகேயன் உத்தரவுப்படி, திருச்சிராப்பள்ளி-13, புதுக்கோட்டை-36, கரூர்-39, பெரம்பலூர்-15, அரியலூர்- 20 என 123 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 202 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர்- 12 திருவாரூர்- 20, நாகப்பட்டினம்- 27, மயிலாடுதுறை-24 என 83 பேரை காவல்துறையினர் கைது செய்து, 5,104 லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறியதாவது:
பச்சமலை வனப் பகுதிகளிலும், மெத்தனால் பயன்படுத்தப்படும் தொழிற்சாலை பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர்களை, வழக்குகள் நிலுவையிலுள்ள நபர்களைத் தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.