districts

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுக! அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 2-  பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் அ.நாவலரசன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சுப்பிரமணியன் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீ மகேஷ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.தேவதாஸ் (பேராவூரணி), ஆர்.ராஜேஸ்வரி (சேதுபாவாசத்திரம்), அனைத்து மருந்தாளுநர் சங்க வட்ட துணைத் தலைவர் ஆர்.சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் ஐந்து விழுக்காடாக குறைக்கப்பட்டதை கைவிட்டு, ஏற்கனவே இருந்த 25 விழுக்காடு பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.  சத்துணவுத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மறைவிற்கு பின், கருணை அடிப்படையில் சத்துணவு ஊழியர்களின் ஆண் வாரிசுக்கு பணியிடம் மறுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிப் பளுவினை குறைக்க வேண்டும்.  அலுவலக பணி நேரத்திற்கு பின்பும், அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டங்களை தவிர்க்க வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

;