தஞ்சாவூர், செப்.3 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம், பரக்கலக்கோட்டை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பள்ளி மாணவர்கள் - ஆசிரியர்கள் பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. இல்லாவிட்டால் செப்.15 ஆம் தேதி பள்ளிக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளி பாதுகாப்புக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “பட்டுக்கோட்டை வட்டாரம் பரக்கலக்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 39 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. கஜா புயலின் போது மேலும் பாதிப்படைந்து காரைகள் தொடர்ந்து பெயர்ந்து விழுந்து வருகிறது. பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை அப்புறப்படுத்தக் கேட்டு, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம பொதுமக்களால் கோரிக்கைகள் வைக்கப்பட்டு முறையாக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 2021 டிசம்பர் மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பட்டுக்கோட்டை சுற்றுப்பயணத்தின் போது நேரில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. 2022 ஜூலை 29ஆம் தேதி நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மேல்நிலை தொட்டியின் உறுதித் தன்மை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை துவங்கும் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று, பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாக்கும் முன்னேற்பாடாக பள்ளி வளாக முன் கதவுகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.