districts

இடிந்து விழும் நிலையில் அரசு தொகுப்பு வீடுகள் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க கட்டுமான சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, டிச.10 - இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றிய பேரவைக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள டி.மணல்மேட்டில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஏ.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கே.குணசேகர் வரவேற்றார். பேரவையை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் எல்.லட்சுமணன் உரையாற்றினார். ஒன்றியத் தலைவராக ஏ.உதயகுமார், ஒன்றிய செயலாளராக கே.குணசேகர், ஒன்றிய பொருளாளராக ஏ.ரவி உள்ளிட்டோரை உள்ளடக்கிய 12 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிவித்து மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன் சிறப்புரையாற்றினார். கட்டுமான தொழிலாளர்களின் நல வாரிய பயன்களை முழுமையாக வழங்க வேண்டும். நலவாரிய பதிவு பணிகளை எளிமையாக்கி, நலவாரியம் மூலம் வழங்கப்படும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள வீடு கட்டும் திட்டத்தில் உள்ள கெடுபிடி முறைகளை கைவிட வேண்டும். நலவாரிய தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 60 வயது கடந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.