விருதுநகர், ஜன.20- மாணவர்கள் தோல்விகளை மைல் கற்களாக்கி கடுமை யாக உழைத்தால் 100 சதவீதம் வெற்றி நிச்சயம் என சந்தி ராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் விருதுநகரில் நடைபெற்ற மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். சந்திராயன்-3 திட்ட இயக்குநர் முனைவர் வீரமுத்து வேல் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘சந்திராயன் 3 செயல் திட்டத்தில் இருந்த அறிவியல் சவால்களை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொண்டோம். விண்வெளித்துறையில் கணிதமும், இயற்பியலும் மிக முக்கிய இடம் பெறுகிறது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும். மேலும், தோல்விகளை மைல்கற்களாக்கி கடினமாக உழைத்தால் 100 சதவிகிதம் வெற்றியை பெற முடியும். படிக்கும் காலங்களில் மாணவர்கள் ஒழுக்கத்துடன், தெளி வாக படிக்க வேண்டும். பாடங்கள் அனைத்தும் முக்கியம், அது வாழ்க்கைக்கு பயன்படும். மேலும் வாழ்க்கையில் பல மாறுபட்ட சூழ்நிலைகளை கையாளவும் அது உதவியாக இருக்கும். மேலும், நிலவில் இருக்கும் ஆற்றலை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்திற்கு எளிதாக செல்ல முடியும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தற்போது ஆராய்ச்சியில் உள்ளது. சந்திராயன்-3 வெற்றிக்கு இலக்கை நிர்ணயித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர் முயற்சி செய்ததே காரண மாகும். இலக்கை அடைவதற்கான வழிகளை அறிந்து கொண்டு தொடர் முயற்சி மூலமும், தோல்விகளிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டும், தொடர் தோல்விகளினால் தொய்வு அடையாமல் ஒழுக்கத்துடன் தங்களது பணியை மேற்கொள்ளும் போது அந்த துறையில் நாம் சாதிக்க முடியும். மாணவர்களுக்கு விண்வெளி துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன’’ என்றார். நிகழ்வில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் 1000 மாணவர்கள் மற்றும் 350 ஆசி ரியர்கள் கலந்து கொண்டனர்.