districts

img

பிஎஸ்என்எல்-க்கு 4ஜி, 5ஜி சேவைகளை உடனே வழங்க நடவடிக்கை தேவை

மன்னார்குடி, பிப்.2-  பிஎஸ்என்எல் 4ஜி, 5ஜி சேவைகளை முழுமையாக வழங்குவதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிறுவனத்தின் நிலங்கள் உள்ளிட்ட சொத்துகள் விற்கப்படாமல், திருடு போகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தஞ்சாவூர் தொலைதொடர்பு மாவட்ட பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் கூட்டு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.  இக்கூட்டு மாநாடு, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வெஸ்டர்ன் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் பி.மாணிக்கம், கே.பிச்சைக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.என்.செல்வராஜ் வரவேற்றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.ராஜு துவக்க உரையாற்றினார். பிஎஸ்என்எல் பொது மேலாளர் எஸ்.ராஜாகுமார் ஓய்வூதியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் எம்.குருசாமி, துணைத் தலைவர் எஸ்.நடராஜா, மாநிலப் பொருளாளர் ஏ.இளங்கோவன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பனி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் இபிஎப், இஎஸ்ஐ. உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் நவீன தாராளமய, தனியார்மய கொள்கைகள் கைவிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் ஆர்.மகேந்திரன் நன்றி கூறினார்.