districts

img

ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதை தடை செய்க!

திருச்சிராப்பள்ளி, அக்.14 - பாரத ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பின் ஏழாவது பொதுக்குழு கூட்டம் திருச்சியில் உள்ள அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.பி.ராமன் தலைமை வகித்தார். பொருளாளர் திருச்சி என்.சுப்பிரமணியன், துணைத்தலைவர் டி.வி.சந்திரசேகரன், துணைச் செயலாளர் மதுரை எம்.முருகையா, பாரத ஸ்டேட் பேங்க் ஊழியர் சங்கத்தின் மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனையில் இருக்கும் குற்றவியல் நீதி சட்டத் திருத்தங்களை நாடு தழுவிய அளவில் பொது விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் சிறப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும். பாரத ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிராக அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு பிரிமியத்தை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகமே முழுமையாக ஏற்க முன்வர வேண்டும். பாரத ஸ்டேட் வங்கியின் மருந்தகங்களில் தகுதியான மருத்துவர் பரிந்துரைக்கும் தரமான மருந்துகளை எல்லா வங்கி நாட்களிலும் வழங்க வங்கி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், துணை பொருளாளர் பூமிநாதன், திருச்சி சந்திரா கில்பர்ட், திருவாரூர் பாண்டுரெங்கன், பாண்டிச்சேரி எஸ்.கருணாகரன், கோவை எம்.ரகுநாதன், வேலூர் லோகநாதன், மதுரை பரவை பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் அஹமது ஹூசைன் மற்றும் அமைப்பின் செயலாளர் எம்.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.