கும்பகோணம், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் என்ஜேஎம் தற்காப்பு கலை பள்ளி சார்பில், கராத்தே தற்காப்பு கலை நிகழ்ச்சி மற்றும் மாநில அளவிலான கராத்தே மாணவர்களுக்கு சான்று வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கும்பகோணம் அருகே உள்ள கிராமங்களிலிருந்து 75 மாணவர்கள் பயிற்சி பெற்று, பாராட்டுச் சான்றிதழை பெற்றனர். அவர்களில், தேர்வு பெற்றோருக்கு தகுதியின் அடிப்படையில் வண்ண கலர் பெல்ட்டுகள், கருப்பு பட்டை பயிற்சி சான்று மற்றும் நினைவு பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்ஜேஎம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் நிறுவனர் நஜிபுதீன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நாச்சியார் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி உமா சங்கர், ஜாபர்அலி, நூருல்அமீன், நெல்லை.கண்ணன் ஆகியோர் பங்கேற்று பாராட்டுச் சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளையும் வழங்கினர்.