திருச்சிராப்பள்ளி, ஜன.9 - திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம். இவர் ஆண்டாள் வீதியில் தனது மனைவியுடன் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வரகனேரி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், கமலேஷ் ஆகியோர் இப்பகுதியில் கடை நடத்தக்கூடாது எனக் கூறி பரமசிவத்தின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, அவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தி உள்ளனர். மேலும், அவருடைய ஆட்டோவின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து பரமசிவம் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரளித்து ஒரு வாரம் ஆகியும், குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்யவில்லை. குற்றவாளிகளை பாதுகாக்கும் கோட்டை காவல்துறையை கண்டித்தும், சாதி பெயரை சொல்லி திட்டிய சிவக்குமார், கமலேஷ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மலைக்கோட்டை பகுதிக் குழு சார்பில் செவ்வாயன்று ஆண்டாள் வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக் குழு உறுப்பினர் மணிகண்டன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், பகுதி செயலாளர் லெனின் ஆகியோர் பேசினர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சிவராமன், ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்த பின், அனைவரும் கலைந்து சென்றனர்.