districts

ஸ்டெம் அறிவியல் பூங்காவில் டிஜிட்டல் கோளரங்க காட்சி

தஞ்சாவூர், ஆக.20-  

    பகுத்தறிவாளர் மருத்துவர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாளான, தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாநகராட்சியால், அருளானந்த நகரில் துவங்கப்பட்டுள்ள ஸ்டெம் அறிவியல் பூங்காவில், சனிக்கிழமை சிறப்பு டிஜிட்டல் கோளரங்க காட்சி நடைபெற்றது.  

    தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பேரா.கலைவாணி தலைமை வகித்தார். ஸ்டெம் பூங்காவின் மேலாளர் தி.மகேஷ் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

    சேலம் வானியல் நிபுணர் ஜெயமுருகன், ஸ்டெம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கோளரங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வான் அறிவியல் விந்தைகள் பற்றி உரையாற்றினார்.

     தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாரன் அறிமுக உரையாற்றினார்.  முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் லெ.முருகன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார். ஜீவிட் அறிவியல் மைய விஞ்ஞானிகள் முனைவர் ஸ்ரீநாத், முனைவர் சினேகா மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.