பாபநாசம், மார்ச் 19- வேளாண்மை உழவர் நலத் துறை சார்பில் பாபநாசம் வட்டாரத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் மானியத் திட்டங்கள், செயல் விளக்கத் திடல்களை குறித்து தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் நல்ல முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார் அய்யம் பேட்டை அருகே சோமேஸ்வர புரம் கிராமத்திற்கு வந்திருந்த வேளாண் இணை இயக்குனர் நல்ல முத்துராஜா. “தேசிய உணவு எண்ணெய் இயக்கத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ள சோயா செயல் விளக்கத் திடல்கள், நெல் தரிசில் வரிசையில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து விளக்கத் திடல்கள் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார். கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள கபிஸ்தலம் துணை விரிவாக்க மையத்தை யும் பார்வையிட்டார். பின்னர் பாபநாசம் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை கருவிகள் தொகுப்பு மற்றும் சோயா விதைகளை வழங்கினார். ஆய்வின் போது பாபநாசம் வேளாண் உதவி இயக்கு நர் சுஜாதா, துணை வேளாண் அலுவலர் எபினேசர், உதவி வேளாண் அலுவலர்கள் குரு சரவணன், சதீஷ், பரணிகா, அட்மா மேலாளர் சிவரஞ்சனி ஆகியோர் உடனிருந் தனர்.