மன்னார்குடி, ஜூன் 13 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட 4 ஆவது மாநாடு மன்னார்குடியில் நடைபெற்றது. மாநாட்டை முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் துவக்கி வைத்தார். மாநாட்டிற்கு கதா.க.அரசு தாயுமானவன் தலைமை வகித்தார். செயலாளர் அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கைகளை மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி முன்வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் ரமணி, திராவிடர் கழகத்தின் நிர்வாகி சிங்காரவேலர் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். இதில், புதிய மாவட்டத் தலைவராக ஜி.பழனிவேலு, மாவட்டச் செயலாளராக கே.தமிழ்மணி, மாவட்டப் பொருளாளராக இரா.ஏசுதாஸ், ஆகியோரை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணை பொதுச் செயலாளர் சின்னை.பாண்டியன் புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் மாநாட்டை முடித்து வைத்தும் சிறப்புரையாற்றினார். தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டத்தில் தீண்டாமை பல வடிவங்களில் அதிகம் உள்ளது. இதனை ஒழித்திட ஒன்றிய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட சிறப்பு சட்டங்களை இயற்ற வேண்டும். பட்டியலின மாணவர்களுக்குரிய இடஒதுக்கீட்டினை முழுமையாக அளிக்காமல் ஊழல்கள் நடக்கின்றன. இதனை தடுத்து, இந்த இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.