திருவாரூர், ஜுன் 26 - திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனிருந்தார். இதில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேலுடையார் மேல்நிலைப் பள்ளி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை கல்லூரியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியானது திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்றடைந்தது. முன்னதாக, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாணவ, மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர். துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கலால்) கண்மணி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது, அண்ணா சிலை நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து காவல் ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியநாதன் வரவேற்றார். முன்னதாக பள்ளி வளாகத்தில் காவல் ஆய்வாளர் ராமராஜன், போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். உதவி தலைமை ஆசிரியர் நீதி நன்றி கூறினார். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழி ஏற்புக்கு கல்லூரி முதல்வர் பேரா. வீ.பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் ரமேஷ், ஆங்கிலத்துறை தலைவர் கணேசன், கணிதத்துறை தலைவர் கிளாடிஸ் மற்றும் கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.