திருத்துறைப்பூண்டி, மே 7- சட்டப்பேரவை கூட்டத் தொடரில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து தமிழகத்தில் மிக பெரிய சதுப்புநில பகுதியாக உள்ள முத்துப்பேட்டை அலையாத்திகாடு பகுதிகளை சர்வதேச தரத்தில் சுற்றுலா தளமாக மேம்படுத்திட கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திகாடு பகுதியை ரூ.4 கோடி மதிப்பீட்டில் நவீன சுற்றுலா தளமாக மேம்படுத்திட அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் படகில் பயணித்த வண்ணம் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் படகு சவாரி, நடைபாதைகள், பறவைகளை காண பார்வையாளர் மாடம் மற்றும் பிற வசதிகளுக்காகவும் வசதிகளுடன் கூடிய நவீன சுற்றுலா தளமாக மேம்படுத்தபடும் என்பது குறிப்பிடத்தக்கது.