தஞ்சாவூர், மார்ச் 2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கொளக்குடி மாந்தோப்பு பகுதியில் தஞ்சை கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மருத்துவர் என்.ஒ.சுகபுத்ரா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். இப்பகுதியில், நலிவடைந்த பிரிவினர் 123 பேருக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா மனைப்பட்டா வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில், தஞ்சை கூடுதல் ஆட்சியர் (வருவாய்) மருத்துவர் என்.ஓ.சுகபுத்ரா சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும், நிலத்தின் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை பார்வை யிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது, பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் யோகச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.