districts

img

பேராவூரணியில் தொடர் விபத்து: வேகத்தடை அமைப்பதில் அலட்சியம்

தஞ்சாவூர், பிப்.16- வேகத்தடை அமைப்பதில் அலட்சியம் காட்டும் அலுவலர்களால் பேராவூரணியில் தொடர் விபத்து ஏற்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேதுசாலையில், பூக்கொல்லை செல்லும் வழியில் சாலையின் வலதுபுறம் பெட்ரோல் பங்க் உள்ளது. மேலும், அதன் அருகிலேயே முனிக்கோவில் சாலை உள்ளது. மேலும், நாட்டாணிக்கோட்டை செல்லும் சாலையும் உள்ளது. இப்பகுதியில் தொழிற்சாலைகள், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. பேராவூரணியில் இருந்து, கிழக்கு கடற்கரை செல்லும் முக்கியச் சாலையாகவும் இந்த வழித்தடம் உள்ளது. வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர கனரக வாகனங்கள் பயணிக்கின்றன.  இந்நிலையில், பேராவூரணி சேதுசாலை பெட்ரோல் பங்க் அருகில் சாலை வளைவில் வாகனங்கள் அதிவேகத்தில் வந்து திரும்புகின்றன. இதன் காரணமாக முனிக் கோவில் செல்லும் சாலையிலும், பெட்ரோல் பம்ப் அருகே இருக்கும் குடியிருப்புகளுக்குச் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு இப்பகுதியில் வேகமாக வந்த சரக்குவேன் எதிரே திசை மாறி வந்த, வாகனத்திற்கு வழி விடும்போது விபத்துக்குள்ளாகி, தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.  எனவே, இப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, சாலையின் இரு புறமும் வேகத்தடை அமைத்து அதிவேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், பெட்ரோல் பம்பிற்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடந்து செல்லவும் உரிய வழி ஏற்படுத்தித் தர நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆறு. நீலகண்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.