districts

img

வறட்சி நதியாக மாறிய வற்றாத ஜீவநதி

கொள்ளிடம் ஆற்றுக்குள் புகும் உப்பு நீர் கொள்ளிடம், அக்.13 - மழைப் பொழிவு இல்லாததால், வற்றாத ஜீவநதியாக கருதப்படும் கொள்ளிடம் ஆறு வறண்டு காணப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள வடரங்கம், பாலுரான்படுகை, மாதிரவேளூர், திட்டுப்படுகை, நாதல்படுகை, அளக்குடி, காட்டூர் வழியே சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆறு வங்க கடலில் கலக்கிறது.  கடந்த 25 வருடங்களுக்கு முன்பு வற்றாத ஜீவ நதியாக இருந்து வந்தது இந்த கொள்ளிடம் ஆறு. காலப்போக்கில் படிப்படியாக மழை பொழிவு குறைந்து, ஆற்றில் நல்ல நீருக்கு பதிலாக உப்பு நீர் புக ஆரம்பித்துள்ளது. கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்திலிருந்து 20 கி.மீட்டர் தொலைவிற்கு ஆற்று நீர் உள்ளே புகுந்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. ஆற்றங் கரையோரம் பயிரிடப்பட்டு வந்த தோட்ட பயிர்களின் பரப்பளவும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு போதிய மழைப்பொழிவு இல்லாததால், உப்பு நீர் மட்டுமே கொள்ளிடம் ஆற்றில் இருக்கிறது. கரையோர கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகளின் மேய்ச்சலுக்குகூட புல் இல்லாமல் ஆறு வறண்டு கிடக்கிறது.  சென்ற வருடம் தொடர்ந்து ஏழு முறை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர கிராமங்களில் உப்பு நீராக இருந்த நிலத்தடி நீர், நன்னீராக மாறியது. ஆனால் இந்த ஆண்டு, நிலத்தடி நீர் மீண்டும் உப்பு நீராக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் கரையோர கிராம மக்கள் கவலையில் உள்ளனர்.