districts

img

வாய்க்காலில் உடைப்பு 10 நாட்களாக தண்ணீர் நிறுத்தம் வறண்டு கிடக்கும் குறுவை பயிர்கள்

தஞ்சாவூர், ஆக.2 -  

   10 நாட்களாக தண்ணீர் வராததால், வயல்கள் காய்ந்து நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த குறுவை பயிர்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் அணைக்கட்டில் இருந்து, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என மூன்று ஆறுகள் பிரிகின்றன. இதில், வெண்ணாற்றின் ஓரத்தில் சிறிய அளவில் ஜம்பு காவிரி என்ற பாசன வாய்க்கால் பிரிகிறது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜம்பு காவிரி மதகுகளை ஒட்டியுள்ள பகுதியின் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஜம்புகாவிரி வாய்க்கால் தண்ணீரை நம்பி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக வாய்க்காலில் தண்ணீர் வராததால், பயிர்கள் காய்ந்து வருகின்றன. வயல்கள் பாலம் பாலமாக வெடித்து காட்சியளிக்கின்றன.

     இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நடவு செய்து 20 நாட்களான இளம் பயிர்கள் கருகி விட்டன. மிஞ்சிய பயிரை காப்பாற்ற, ஏக்கருக்கு ரூ.7,500 செலவு செய்து, டீசல் இன்ஜின் மூலம் வாய்க்காலில் தேங்கி கிடங்கும் தண்ணீரை குழாய் வழியாக கொண்டு வந்து வயலுக்கு இறைத்து வருகிறோம். எங்கள் பகுதியில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளிடம் கேட்டால் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். சிரமப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகுவதை பார்க்க வேதனையாக உள்ளது” என்றனர்.