districts

img

பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை உண்டு 7 மயில்கள் சாவு: விவசாயி கைது

புதுக்கோட்டை, பிப்.8-  கோழி மற்றும் எலியின் தொல்லையைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி கலந்து வைக்கப்பட்ட அரிசியை உண்ட 7 மயில்கள் உயிரிழந்தன. இச்செயலைச் செய்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை வனச்சரகத்தைச் சேர்ந்த ஆலங்குடி பிரிவுக்குட்பட்ட மேலாத்தூர் கிராமத்தில் மயில்கள் இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை வனச்சரக அலுவலர் எம். சதாசிவம், வனவர்கள் பி. முருகானந்தம், பொ. ரவிச்சந்திரன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு இறந்து கிடந்த 3 ஆண் மயில்கள், 4 பெண் மயில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், மேலாத்தூரைச் சேர்ந்த சின்னப்பா(60) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். தனது கடலைத் தோட்டத்தில் கோழி மற்றும் எலியின் தொல்லையைக் கட்டுப்படுத்துவதற்காக பூச்சிக்கொல்லி மருந்து கலந்த அரிசியை பரப்பி அவர் வைத்திருந்தது தெரியவந்தது. பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட அரிசி சேகரிக்கப்பட்டு திருச்சி தடய அறிவியல் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சின்னப்பா, ஆலங்குடி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் வன உயிரினங்களை வேட்டையாடுவதும், அவற்றின் உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதும் வன உயிரினச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கான குற்றங்கள் என மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.