districts

img

2,553 மருத்துவர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் : அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

பெரம்பலூர்,ஜன.5- தமிழகத்தில்  2 ஆயிரத்து 553 மருத்துவர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார நிலை யத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமையன்று திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் 300 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 150 இடங்களில் பொது சுகாதார அலகு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார அலகு கட்டிடங்களில் காசநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற 67 வகையான மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில் ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக 2 ஆயிரத்து 553 மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பும் வகையில் எம்ஆர்பி (Medical Services Recruitment Board) என்ற அமைப்பின் மூலம் இன்று தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 156 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 23 ஆயிரத்து 917 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு முடிவுற்று மிக விரைவில் மருத்துவர்க ளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழகத்திற்கு ஐ.நா.சபை விருது “இதயம் காப்போம்” என்ற திட்டத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 13 ஆயிரத்து 673 நபர்கள் பயன் பெற்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை தொற்று நோய்கள் பரவாமல் மிகச் சிறப்பாக செயல்படு வதாக தமிழகத்தை தேர்ந்தெடுத்து அதற்காக ஒரு விருதினையும் வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் என 15 இடங்களில் 15 புதிய மருத்துவ கட்டிடங்கள் ரூ.8.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து தரப்பு மக்களும் தமிழக அரசின் மருத்துவ சேவைகளை பயன்படுத்தும் வகையில் கட்டண படுக்கை பிரிவு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வருகிறது.  மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 5 புதிய துணை சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு இடம் கண்டறியப்பட்டு சுகாதாரத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும், கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.