தஞ்சாவூர், டிச.2- புயல் சின்னம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து பத்தாயிரம் நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக் காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், மந்திரி பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிபட்டினம், கணேச புரம் உட்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப் படகுகளும், மல்லிப்பட்டினம், கள்ளி வயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப் படகுகளும் உள்ளன. விசைப்படகுகள் திங்கள், புதன், சனி ஆகிய நாட்களிலும், பிற தினங் களில் நாட்டுப் படகு மீனவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்ற னர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் விட்டு விட்டு மழைபெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் உருவாகி உள்ள தாலும், கடல் சீற்றமாக இருப்பதாலும், கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தஞ்சையில் வழக்கம் போல் கடலுக்கு செல்ல வேண்டிய நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மேலும், தங்கள் படகுகள் அனைத்தையும் துறை முகங்களில் நங்கூரமிட்டு பாதுகாப் பாக நிறுத்தி வைத்துள்ளனர்.