districts

img

போக்சோ குற்றவாளி ஜோதிமுருகனுக்கு பிணை வழங்கியதை எதிர்த்து முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளார் ஜோதிமுருகனுக்கு மகிளா நீதிமன்றம் பிணை வழங்கியதை எதிர்த்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தலைமையில் திண்டுக்கல் நீதிமன்றம் முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கே.பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிரான  பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் அக்கல்லூரி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்று 2 நாட்களாக இரவு பகலாக போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில், குற்றவாளி கைது செய்யப்பட்ட ஒரு வார காலத்திற்குள் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. போக்சோ சட்டத்தின்படி சில பிரிவுகளில் பிணை வழங்க முடியும் என்று இருந்தால் கூட குற்றவாளி மாணவிகளின் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. அக்கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் பல விருதுகளை பெற்றிருக்கிறார் என்றும், இவர் மீது எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லை. இவர் நல்லவர் என்றும்,  கூறி பிணை வழங்கும் போக்கு கவலையளிப்பதாக உள்ளது. கடந்த காலத்தில் அவர் புகழ் பெற்றவராக இருந்தால் கூட தற்போது அவர் செய்த குற்றம் தொடர்பாக வழக்கில் நீதி வழங்க வேண்டுமே தவிர விருதுகளைக் கொண்டு ஜாமீன் வழங்கக்கூடாது. தாளாளர் ஜோதி முருகனுக்கு பிணை வழங்கியது தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்,  சிறுமிகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நீதிமன்றத்தின் மீது ஒரு நம்பிக்கையின்மையையும்,  அதிர்ச்சியையும், கவலையையும்  ஏற்படுத்துகிறது. ஆகவே நீதிமன்றம் தாளாளர் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டும் என்று எங்களுடைய மன வேதனையை வெளிப்படுத்தி வருகிறோம்.

வடமதுரை அருகே ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அக்குழந்தையின் மூக்கில் மின்சாரத்தைச் செலுத்தி கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. அந்த போக்சோ குற்றவாளி எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி  இதே மகிளா நீதிமன்றம் விடுவித்தது. அப்படி என்றால் இந்த கொலை யார் செய்தது என்று கேள்வி எழுப்ப வேண்டிய நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்தது.

போக்சோ வழக்கு பதியப்பட்ட தாளாளர் ஜோதிமுருகனுக்கு அவசர அவசரமாக பிணை வழங்கப்பட வேண்டிய அவசியம் என்ன? இது நீதிமன்றத்தின் மீது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தாது. ஆகவே மகிளா நீதிமன்றம் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய முன்வரவேண்டும் என்று கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் எம்.ஜானகி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஜி.ராணி, மாவட்டப்பொருளாளர் கவிதா,  மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;