வனப்பகுதியில் உள்ள பறவைகள் குறித்து வனத்துறை சார்பாக ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். அதன்படி கொடைக்கானல் வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் 8 வனச்சரகப்பகுதிகளில் வனத்துறையினர், மாணவ மாணவியர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து புகைப்படங்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தினர். இதில் அடர்ந்த வனப்பகுதிகளில் பல்வேறு வண்ணங்களிலான குருவி இனங்கள், காட்டு மைனா, மீன்கொத்திகள் மரங்கொத்திகள், பார்பெட், செம்மீசைக் கொண்டைக்குருவி, நீலகிரி மரம்கொத்தி மற்றும் மயில்கள் ஆகியவை ஏராளமான அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்காக மாவட்ட வன அலுவலர் டாக்டர் திலீப் அறிவுரையின் பெயரில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தனியாக புத்தகமாக பிரசுரிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.