தருமபுரி, ஆக.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலத்தை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பிக்கிலி, கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் தருமன். இவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது நிலத்தில் ஒரு பகுதியாக ரூ.20 லட்சம் மதிப்பிலான 8 சென்ட் நிலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கினார். இதுகுறித்து தருமன் கூறுகையில், ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஒரு பகுதி நிலத்தை வழங்க வேண்டும் என எனது தந்தை காளியப்பன் விரும்பினார். அதன் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நான் 8 சென்ட் நிலத்தை வழங்கியுள்ளேன், என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக வழங்கிய நிலத்தின் பத்திரத்தை, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வே.விசுவநாதன், ஆர்.சின்னசாமி, விவசாயிகள் சங்க பகுதிக்குழுச் செயலாளர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் ராதிகா, அன்பரசு, அருள், ஆகியோரிடம் தருமன் வழங்கினார்.