அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணிநேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சராக பதவி வகித்தவர் கே.பி.அன்பழகன் தற்போது பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், கெராகோடஅள்ளி கிராமத்திலுள்ள அவரது வீடு உறவினர்கள், ஆதரவாளர்கள், அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.
தருமபுரி,கெரகோடஅள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, அன்னசாகரம், இலக்கியம்பட்டி, தாளப்பள்ளம், அமானி மல்லாபுரம், நூலஅள்ளி, பூலாப்பட்டி, பேளாரஅள்ளி, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கே பி அன்பழகனின் நெருங்கிய ஆதரவாளர்கள், உறவினர்கள், அதிமுக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது உறவினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.