தருமபுரி அருகே அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதால், மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொரப்பூர் - கம்பைநல்லூர் நெடுஞ்சாலையில் உள்ளது நவலை என்கிற ஊர். பட்டியல் சமூகத்தவர் வாழும் இவ்வூரைச் சேர்ந்தவர் மு.பாஞ்சாலை(59) வாழ்வாதாரத்திற்காக இவர் நவலை பஸ் நிறுத்தம் அருகே நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவ்வப்போது மாலையில் மாட்டிறைச்சி பொரித்து விற்றும் வந்துள்ளார்.
பாஞ்சாலை 20.02.2024 செவ்வாய்க் கிழமை நண்பகல் சுமார் 12.30 மணியளவில் அரூர் பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊரான நவலை வருவதற்குத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் (TN29 N3165 ) ஏறியுள்ளார். அவர் மூடியிடப்பட்ட தூக்கு வாளி ஒன்றைக் கையில் வைத்திருந்திருக்கிறார். வண்டி மோபிரிப்பட்டி வனப்பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது பயணச்சீட்டுக் கொடுக்க வந்த நடத்துநர் ரகு என்பவர், பாஞ்சாலையின் கையிலுள்ள தூக்கு வாளியைப் பார்த்துவிட்டு "நீ அந்த நவலைக்காரி தானே, தூக்கு வாளியில் என்ன மாட்டுக்கறியா?" என்று கேட்டுள்ளார். இவ்வளவு பயணிகள் இருக்கத் தன்னிடம் நடத்துநர் இவ்வாறு ஏன் கேட்கிறார் என்று அதிர்ச்சியடைந்த பாஞ்சாலை பதில் சொல்லும் முன்னமே நடத்துநர் விசிலடித்து வண்டியை நிறுத்தியுள்ளார். நீ மாட்டுக்கறிதான் வைத்திருப்பாய். அதையெல்லாம் வைத்துக்கொண்டு பஸ்ஸில் வர அனுமதிக்க முடியாது, இறங்கு" என்று மிரட்டியுள்ளார். அப்படி இறக்கி விடுவதானால் ஏதாவது ஒரு பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடுங்கள் என்று பாஞ்சாலை கெஞ்சிக் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு உடன்படாத நடத்துநர் அந்த இடத்திலேயே இறக்கி விட்டுள்ளார்.
அவமதித்து இறக்கி விடப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுடன் அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் அந்த உச்சி வெயிலில் நடந்து வந்து அடுத்த நிறுத்தத்தில் பேருந்து பிடித்து ஊர் வந்து சேர்ந்துள்ளார் பாஞ்சாலை.
தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பை மகனிடமும் உறவினர்களிடமும் பாஞ்சாலி தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவர்கள் மேற்சொன்ன பேருந்து ஒசூரிலிருந்து திரும்பி வருகையில் நவலையில் நின்றபோது, நடத்துநர் ரகுவிடம் ஒரு வயதான பெண்ணை இப்படி இறக்கிவிட்டது நியாயமா என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு "நான் ரூல்ஸ்படி இறக்கிவிட்டேன். உங்களால முடிஞ்சதப் பாத்துக்குங்க" என்று ஆணவமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பி இருக்கிறார்.
போதைப் பொருட்கள், வெடி பொருட்கள், எரிபொருட்கள் ஆகியவற்றைப் பேருந்தில் எடுத்து வரக்கூடாது. ஆனால் இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்து வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. தவிரவும் அத்தனை பயணிகளில் பாஞ்சாலையின் தூக்கு வாளியைத் திறந்துகூடப் பார்க்காமல் அதில் இருப்பது மாட்டுக்கறிதான் என்கிற முடிவுக்கு நடத்துநர் எப்படி வந்து சேர்ந்தார்? அப்படியே தூக்கு வாளியில் மாட்டுக்கறியே இருந்தாலும் அதில் நடத்துநருக்கு என்ன பிரச்னை? நவலையில் வசிக்கும் பெண் என்று அவருக்குத் தெரிந்திருப்பதால் அவரது தூக்கு வாளியில் மாட்டுக்கறிதான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தானாக வந்து சேர்ந்த நடத்துநர், அவரை நடுவழியில் இறக்கிவிட்டது அப்பட்டமான தீண்டாமை வன்கொடுமையாகும். அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடும் அளவுக்குக்கூட சகிப்புத்தன்மை அற்றவராகப் பட்டியல் சமூகப் பெண் மீது வெறுப்பைக் காட்டியுள்ள இந்த நடத்துனர் ரகு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து, ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு ஆகிய இருவரையும் போக்குவரத்துத்துறை பணியிடை நீக்கம் செய்தது.
பட்டியலினத்தை சேர்ந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரையடுத்து, அரூர் போலீசார் ஓட்டுநர்,நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.