தஞ்சாவூர், ஜூன் 24 - ஒரத்தநாடு கிளை நூலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தமுஎகச ஒரத்தநாடு கிளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கிளை நூலகம், பாரதிதாசன் கல்லூரி மற்றும் நீதிமன்றம் அருகே அமைந்துள்ளது. இந்த நூலகத்தின் சுற்றுச்சுவர் கஜா புயலின் போது, இடிந்து விழுந்தது. இதுவரை அது சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும், கழிப்பறை செப்டிக் டேங்க் சேதமடைந்து, மூடி திறந்து ஆபத்தான நிலையில் உள்ளது. நூலகத்தை சுற்றி முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்கள், முதியவர்கள் வந்து செல்லும் இந்த இடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அதனை சரி செய்ய வேண்டும். கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில், தேவையான புத்தகங்கள் நூலகத்திற்கு வாங்க வேண்டும். நூலகத்தை தரம் உயர்த்தி, மேம்படுத்த வேண்டும்” என தமுஎகச ஒரத்தநாடு கிளை நிர்வாகி வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.