கும்பகோணம், பிப்.26 - கும்பகோணத்தில் அரசு கவின் கலைக் கல்லூரியின் சேதமடைந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வலியுறுத்தி மாணவ - மாணவிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கவின் கலைக் கல்லூரிகள் இரண்டு மட்டுமே செயல்படுகிறது. அதில் ஒன்று சென்னையிலும், மற்றொன்று கும்பகோணம் சுவாமிமலை சாலையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்த கல்லூரியில் வரைகலை, சிற்பக்கலை, விசுவல் கம்யூனிகேஷன் என்ற மூன்று பாடப் பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி கட்டப்பட்டு சுமார் 44 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பிரதான கட்டிடம் வலுவிழந்து ஆங்காங்கே மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழுகின்றன. இதுகுறித்து மாணவர்கள், முதல்வர் அருளரசனிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தனர். ஆனால் கல்லூரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் வகுப்பறை கட்டிட காரை பெயர்ந்து விழுந்து கொண்டேயிருக்கிறது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அப்பகுதியில் இல்லாததால் விபத்து ஏதும் நிகழவில்லை. தங்கள் மேல் எப்போது கட்டிடம் விழுமோ என்ற பயத்தில் வகுப்பறைக்கு செல்கின்றனர். எனவே அரசு கலை பண்பாட்டு துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். பழுதுபார்க்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. துரிதமாக பணிகளை செய்து முடிக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாததால் அவதிப்பட்டு வருகின்றனர் என மாணவர்கள் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடமும் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி வாயில் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக தமிழக அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிய கட்டிடம் அமைத்து தந்தால் மட்டுமே வகுப்புக்கு செல்ல முடியும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.