தஞ்சாவூர், ஏப்.24 - தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்மார்ட் போன் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 80 விழுக்காட்டுக்கு மேல் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டவராகவும், 18 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவராகவும், சுயதொழில் செய்பவராகவோ அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவராகவோ இருக்க வேண்டும். கல்லூரியில் பயிலும் 18 வயதுக்கு மேற்பட்ட பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன் ஸ்மார்ட்போன் பெறாதவராக இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பிக்கும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்தி றனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சுயதொழில் புரிதலுக்கான சான்று, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சான்று, கல்லூரியில் பயின்று வருவதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், அறை எண் 18, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அல்லது நேரில் 2.5.2022-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.