தஞ்சாவூர், மார்ச்.25- உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை தஞ்சை மருத்துவக் கல்லூரியில், வியாழனன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘காசநோயாளிகளுக்கு சிகிச்சை முடியும் வரை, ஊட்டச்சத்து உணவுக்காக மாதம் ரூ.500 வீதம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் காச நோயாளிகள் சிகிச்சை முடியும் காலம்வரை மாதம்தோறும் ரூ.ஆயிரம் வரை பெறலாம்’’ என்றார். முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட காசநோய் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார். மேலும், காசநோய் இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு குறுந்தகட்டையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், இணை இயக்குநர் திலகம், துணை இயக்குநர்கள் ரமேஷ் குமார், மாதவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.