districts

விளைவித்த பருத்தியை விற்க ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் காத்துக் கிடக்கும் பருத்தி விவசாயிகள்

கும்பகோணம்,  ஜூலை 20 - கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள், தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனை செய்வதற்காக 3 நாட்களாக காத்திருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்கியமான பணப் பயிராக விளங்கும் பருத்தி, இந்த வருடம் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளைவித்த பருத்தியை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.  இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஏலத்தில் தங்களது பருத்தியை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பருத்தி மூட்டையுடன் டிராக்டர், மினி வேன்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாட்களாக சாலையின் ஓரத்திலே சுமார் ஒரு கி.மீட்டர் வரை விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நாங்கள் ஒவ்வொரு முறையும் ஏலத்திற்கு வரும் போது ஞாயிறு, திங்கள், செவ்வாய் என மூன்று நாட்கள் இங்கேயே கழிகிறது. இதனால் எங்களுக்கு வாகனத்திற்கான வாடகையையும் இரண்டு மடங்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தொடக்கத்தில் அதிகபட்ச விலையாக ரூ. 12,000 வரை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது விலை குறைந்து கொண்டே வருவதால் மிகவும் வேதனையாக உள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளை காக்க வைக்காமல், அரசே கொள்முதல் செய்ய வேண்டும்” என்றனர்.