தஞ்சாவூர், ஆக.31- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஐரோப்பா கண்டத்திலுள்ள பிரான்ஸ், இத்தாலி, நார்வே, செக் குடியரசு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு பேச்சுத் தமிழ்ப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்தன.
தமிழ்மொழியைப் பயிலும் ஆர்வம் கொண்ட ஐரோப்பிய மாணவர்கள் 16 பேருக்கு கடந்த ஆக.16 முதல் 30 ஆம் தேதி வரை 15 நாட்கள் பேச்சுத்தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டுப் பேராசிரியர் முருகையன் அப்பாசாமி தலைமையில் வந்த இம்மாணவர் குழுவிற்கு, வகுப்பறைப் பயிற்சி, பொதுமக்கள் புழங்கும் பேருந்து நிலையம், சந்தைக்கடை மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்களுடன் பேசும் பயிற்சி என வெவ்வேறு வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் வழிகாட்டுதலின்கீழ் அமைக்கப்பட்ட குழு, இம்மாணாக்கர்களுக்கான பயிற்சி ஏற்பாடுகளைக் கவனித்தது.
இந்த ஐரோப்பிய மாணவர்கள், தமிழை ஓரளவுக்கு வாசிக்கத் தெரிந்தவர்கள், தமிழ் பற்றிய அறிமுகம் உடையவர்கள், தமிழ் அறவே அறியாதவர்கள் என மூன்று வகையாகப் பிரித்துப் பயிற்றுநர்கள் குழு பயிற்சி அளித்தது. இருவார காலப் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சி.தியாகராஜன் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
பயிலரங்கின் சர்வதேச அமைப்பாளர் முனைவர் அப்பாசாமி முருகையன், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கிய பேராசிரியர்கள் முனைவர் நடராசப்பிள்ளை, முனைவர் இரா.முரளிதரன், முனைவர் அருண் செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இப்பயிற்சியின் அடுத்த கட்டப் பணி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது.