தஞ்சாவூர், ஜூன் 20- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சை மாநகர 4 ஆவது மாநாடு ராஜ்பேலஸ் திருமண அரங்கில் நடைபெற்றது. மாநகரத் தலைவர் கே.மோகன் தலைமை வகித்தார். நகரக் குழு உறுப்பினர் கிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் துவக்க உரையாற்றினார். மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க நிர்வாகி கணேசன், மாதர் சங்க மாநகரச் செயலாளர் இ.வசந்தி, மாநகரத் தலைவர் புனிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் டி.கணேசன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில், மாநகரத் தலைவராக கே.குமார், செயலாளராக சி.ராஜன், பொருளாளராக மோகன் உள்ளிட்ட 19 பேர் கொண்ட மாநகரக் குழு தேர்வு செய்யப்பட்டது. இடஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏல ஒப்பந்தத்தில் மாநகராட்சி நிர்வாகம் கடை வழங்கவில்லை. எனவே, அதனை கண்டறிந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடை ஒதுக்க வேண்டும். தஞ்சை மாநகரில், மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுத் திடல், விளையாட்டுப் பயிற்சி பள்ளி அமைத்து தர வேண்டும். தஞ்சை மாநகரில் மிக அதிக அளவில் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாநகர காவல்துறை போதைப் பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும். சொந்த வீடு, வீட்டுமனை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கவும், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.