தஞ்சாவூர், ஆக.2 - தமிழ்நாட்டில் நிகழ் கொள்முதல் பருவத்தில் இதுவரை 33 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசின் உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே, பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நெல் சேமிப்பு கிடங்கில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தாவது:
தமிழ்நாட்டில் 380 கிடங்குகளில் 20.44 லட்சம் டன் நெல் மூட்டைகளை இருப்பு வைக்கும் வகையில் வசதி உள்ளது. திறந்தவெளி கிடங்கு கள், மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளாக மாற்றப்பட்ட பிறகு மழையில் நெல் மூட்டைகள் நனைவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
கூட்டுறவுத் துறை மூலம் கடந்த ஆண்டு 18.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.15,545 கோடி வழங்கப்பட்டது. இதேபோல நிகழாண்டு விவ சாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.16,500 கோடியும், கால்நடைக் கடன் ரூ.2,500 கோடியும், மத்திய காலக் கடன் ரூ.1,500 கோடியும் என மொத்தம் ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்க தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இதில் இதுவரை 2.90 லட்சம் பேருக்கு பயிர்க்கடன் ரூ.2,666 கோடியும், கால்நடை கடன் ஏறத்தாழ ஒரு லட்சம் பேருக்கு ரூ. 614 கோடியும், மத்திய கால கடன் 3,968 பேருக்கு ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 4.46 லட்சம் பேருக்கு ரூ. 3,349 கோடி வழங்கப்பட்டுள்ளது. வருகிற மாதங்களில் ரூ. 20 ஆயிரம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், பருப்புக்கு ஒப்பந்தம் கோருவதில் தேர்தல் நேரத்தில் தடை இருந்த நிலையில், தற்போது கோரப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் சுணக்கம் இருந்தாலும், ஜூலை மாத ஒதுக்கீடு முழுவதும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற மாதத்துக்கு சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கொள்முதல் பருவத்தில் இதுவரை 33.14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3.71 லட்சம் விவ சாயிகளுக்கு ரூ. 7,221 கோடி பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு 42 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. சாகுபடி பரப்பளவு குறைவு, விவசாயிகள் விளைவித்த நெல்லை தனியாரிடம் விற்றது போன்றவையே நிகழ் பருவத்தில் குறைந்ததற்கு காரணம். ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் நிகழ் பருவத்துக் குள் 37 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கூட்டுறவுத் துறையில் பல்வேறு வகையான உரங்கள் ஒரு லட்சம் டன் அளவுக்கு கையிருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.ஸ்ரீமோகனா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சி.தமிழ்நங்கை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.