districts

நகைகளை மீட்டுத் தரக் கோரி மனு

தஞ்சாவூர், மே 8 - தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த மேலத்திருப்பந்துருத்தியை சேர்ந்த முகமது பைசல் மனைவி பர்வீன்பானு (30). இவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் (பொ) ரவிமதியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “திருச்சி பாலக்கரை பள்ளிவாசல் அருகே மன்னார்புரத்தை சேர்ந்த முகமது பாரூக் (47) அலுவலகம் வைத்துள்ளார். வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் தவிப்பவர்களுக்கு நகையை மீட்க உதவி செய்கிறார். அந்த பணத்திற்கு வட்டி எதுவும் வாங்குவதில்லை  என்று பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.  இதனை உண்மை என்று நம்பிய நான், வங்கியில் இருந்த 22 முக்கால் பவுன் நகைகளை மீட்டு அவரிடம் கொடுத்திருந்தேன். ஆனால் அந்த நகைகளை என்னிடம் அவர் திருப்பி தரவில்லை. பலமுறை கேட்டும் இழுத்தடித்து வந்தார். அப்போதுதான் அவர் என்னிடம் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, என்னுடைய நகைகளை மீட்டுத் தர வேண்டும்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.